அகமுடையாள் 2



இது மட்டும் நான் செய்வேன்,இவை மட்டும் நான் செய்வேன்
காதல் கொண்ட காதலி உனக்கு இவை மட்டும் நான் செய்வேன்...!

கட்டியணைத்தபடி வருடங்கள் கழிப்பேன்
உன்னை ஏந்திக் கொண்டு கிரகங்கள் கடப்பேன்
மூச்சு முற்ற முத்தங்கள் கொடுப்பேன்
என் உயிர் ஊற்றி உன் உயிர் வளர்ப்பேன்

மேகங்கள் வடித்து தண்ணீர் கொடுப்பேன்
நன்னீர் மட்டும் நீ காண கடலினையும் மடிப்பேன்...

அன்பே நீயும் தனிமையில் குளிக்க
இவ்வுலக வாசிகளை சிறு துரும்பு தூசிகளை வேற்று கிரகம் வரை புலம் பெயர்ப்பேன்..
நான் மட்டும் அன்பே உன்னோடிருக்க
கனிவாய் பணிவாய் விண்ணப்பம் இடுவேன்...
உனக்கும் எனக்குமாய் உலகினை அமைப்பேன் ...

காதல் கொண்ட காதலி உனக்கு இவை மட்டும் நான் செய்வேன்...!

உன் ஆடை நூலை கண்டங்கள் ஏழில் பயிரிட்டு வளர்ப்பேன்...
ஈக்களும் உனைத் தீண்டாது உயிரிட்டு காப்பேன்..

அழகாய் செருக்காய் திமிராய் மலரும் பூக்கள் அத்தனைக்கும் உந்தன் முகம் சுட்டுவேன்
அவற்றின் ஆணவம் வெட்டுவேன் ...
உலகில் மலரும் ஒவ்வொரு மலரும் உனக்கே உரியதென உரிமமும் பெறுவேன்...

காதல் கொண்ட காதலி உனக்கு இவை மட்டும் நான் செய்வேன்...!

தேவதை உனக்கு பரிசளிக்க
கோலார் சுரங்கம் வெட்டி முடிப்பேன்
கோகினூர் வைரம் மீட்டு எடுப்பேன்..
ரகசிய பை ஒன்றில் அடைத்து
காதல் முத்தம் சேர்த்து முடித்து
அன்பே உனக்கு வியப்பளிப்பேன்...
வியக்கும் பூவே உன்னைக் கண்டு
செம்முகம் தன்னில் செத்துப் போவேன்..

காதல் கொண்ட காதலி உனக்கு இது மட்டும் நான் செய்வேன்...!

நம் காதல் வேளையில்
மனிதர் கண்கள் அத்தனையும்
கடவுளர் கண் மொத்தத்தையும்
மூடிக்கொள்ள உத்தரவிடுவேன்...
"உன் வெட்க அழகை நான் மட்டும் ரசிப்பேன்"

ஆற்றின் ஓரம், தென்றலின் ஈரம்..
விண்மீன் விளக்கில், நீ இருக்கும் களிப்பில்
விருந்தும் ஒன்று நான் அமைத்துக் கொடுப்பேன்..

அறுசுவை உண்டி நீ உண்ண வேண்டி ...
தமிழழகி உனக்கு தமிழுணவு சமைப்பேன்..
""நீ உண்ணும் அழகில் என் பசி தீர்ப்பேன்""

காதல் கொண்ட காதலி உனக்கு இவை மட்டும் நான் செய்வேன்...!

இன்னொரு பெண் என்னுள் அல்ல,
உலகினுள் வரவே தடைகள் விதிப்பேன்...
பெண்கள் படைப்பை நிறுத்தி விட விண்ணை உடைத்து பிரம்மனைக் கவர்வேன்..

நீ கொண்ட இடம் என்னுடைய மனம் ..
உண்மை தானடி நெஞ்சில் பொறிப்பேன்...

உன் பிரிவில் உயிர் விடுவேன்..
உன் சிரிப்பில் உயிர் பெறுவேன்...

கட்டியணைத்தபடி வருடங்கள் கழிப்பேன்
உன்னை ஏந்திக்கொண்டு கிரகங்கள் கடப்பேன்..

இது மட்டும் நான் செய்வேன், இவை மட்டும் நான் செய்வேன் ..
காதல் கொண்ட காதலி உனக்கு இவை மட்டும் நான் செய்வேன்...!

இவையெல்லாம் நான் செய்தும்
"காதலால்" நீ எல்லாமே செய்வாய்...
"நான் என்ன செய்வேனடி....???"

# அகமுடையாள்#

No comments:

Post a Comment