அருகே வந்தாள் அவள்..
முதலில் குரங்காடிய கிளையாய்
பின் அணிலாடிய கிளையாய்
கடைசியில் காற்றிலாடும் கிளையாய்
மனதும் ஏனோ ஆடியது...
என் விசால பார்வை அவளை மட்டுமே விழுங்கியது...
அருகே வருகிறாள் அவள்...
ஒரு அனிச்சமே ரோஜா சூடினாற் போல்..
ரோஜா நிறம் என் நிறம் நவிழ்கிறது அவளிதழ்
அருகே வந்துவிட்டாள் அவள்..
வில்லென புருவம்...ம்ம்ம் இல்லை
இவள் புருவமென வில் படைத்தால்
எளிதில் வீழலாம் வழிய வரும் இலக்குகள்
வரைகலை வடித்த மூக்கு
அதன் உச்சம் அவள் கன்னத்து மச்சம்..
அருகே நின்றாள் அவள்..
நிலவை மறைத்து விலகும் தென்னங்கீற்றென..
முகம் மறைத்து விலகியது ஒற்றை முடி
செத்து பிழைத்தேன் நானும் அந்த நொடி..!!
அருகே நிற்கிறாள் அவள்..
பெண்மையின் நாணம் புதைத்தாள்
அஃதோடு சேர்த்து என்னையும்...!
எவ்வாறோ விலகியது நாணம்
நாணத்தோடு இரு இமை
இமையடுத்து இரு இதழ்...
"பேசலாம்" என்றாள்....இயைந்தேன்
ம்ம்ம் இல்லை, நோக்கிய கணத்தை பற்றிக் கொண்டேன்...
"இங்கு வேண்டாம் தனிமையில்", என்றாள்.
தனிமை தனிமை தனிமை தந்தவளே
பூமியில் எனக்கென்றொரு தனிக்கோள் படைத்தவளே...!!
என் தனிமை நினைவில் இதோ தனிமையை மட்டும் எடுத்துக்கொள் ..
இருவரும் சேர்ந்து ஒற்றைத் தனிமை எய்தினோம்...
கருநிற பாதரசம் அவள் கண்களில் ஆட
தென்றல் சாமரம் வீச...
மௌனங்கள் மட்டும் பேசின...
கணக்கின்றி நாழிகையும்
பயனின்றி கடிகாரமும் சுற்றியது
என்னைச் சுற்றும் வார்த்தைகள் போல..
நேர அளவு நினைவில் இல்லை
அதன் பிறகோ.....இருவருக்கிடையில்
காற்று புகவும் இடைவெளி இல்லை..
வார்த்தைகளின்றி சாதலை தந்தவள்
ஆரத்தழுவலில் காதலை தந்தாள்...!
இருவரும் ஒரே திசையில்
கவிதை நடையாய் ஒரு பொடி நடையில்...
இடமாய் அவள் தலை சாய
வலதில் அதற்கேற்ற தோள் எனது
வலக்கையின் ஒரு பிடியில் அடங்க
அதற்கேற்ற மெல்லிடை அவளது...
இருநூற்று நாற்பத்தேழில் அடங்கா காதல் எங்களது...
முடிவற்ற புல்வெளியில், இலக்கற்ற சிறுநடையில்....
ஏனோ இடையில் நிற்கிறாய்
உறைந்த நெருப்பாய் பார்க்கிறாய்...
மயக்கும் கண்களில் மைப்பூச்சுக்காரி..
காதலில் நீயோ பொய்ப்பூச்சுக்காரி...
எங்கோ செல்கிறாய்..எங்கோ விரைகிறாய்..
வழியும் கண்ணீர் கண் மை அழிக்க
என்னை நோக்கியபடி ஓடும் உன் முகம் திருப்பி...........எங்கோ........???
எங்கும் செல்வாய் நீ...!
ஒளிவது மட்டும் என் மனதில்...
கண்மூடி விழுந்தேன்....
மரித்துத்தான் போனேனோ..???
.
.
.
.
மனதில் விழுந்த அடி , முதுகில் தெரியுதடி..
கண்களை திறந்தேன்..
அருகே நிற்கிறாள் அவள்...!!!
என் விசால பார்வை அவளை மட்டுமே விழுங்கியது...
அருகே நிற்கிறாள்........என் பாட்டி...???
உறக்கம் தெளிந்த என் கிறுக்குச் சிரிப்பில்..
புரிந்திருக்குமா என் பாட்டிக்கு....
நான் கண்ட கனா...???
#அகமுடையாள் (கவிதைச் சிறுகதை)
No comments:
Post a Comment